Monday, February 21, 2011

இனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்




(பின்) நவீன காலத்தில் தமிழர்கள்

டெக்னாலஜியை வாழ்வாதாரமாக கொண்டு ஒவ்வொரு வருடமும் கல்லூரியை விட்டு வெளிவரும் இரண்டு இலட்சம் இன்ஜினியர்கள் ஒரு பக்கம். முறையான தொழில்கல்வி இல்லாமல் தொழில்நகரங்களுக்கு குடிபெயர்ந்துகொண்டிருக்கும் பல இலட்சம் மக்கள் ஒரு பக்கம் என்று நமது தமிழ்சமுதாயமும் உலகமயமாகிக் கொண்டு தானிருக்கிறது இந்த உலகமயமாதலின் விளைவாக இன்ஜினியர்கள் மட்டுமல்ல. கோடிக்கணக்கில் சாதாரண மக்களும் தங்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈசன் படத்தில் வருவதைப்போல மனிதர்கள் - இந்துமதமே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்த ஆதிமதத்தின் காலத்திலிருந்து, ஒரே தாவலில் நைட்கிளப்-டேட்டிங்-லிவிங்டுகெதர்-(பின்)நவீனத்துவம் காலத்திற்கு தாவுகிறார்கள். இதில் ஈசனின் குடும்பத்தைப்போல் எத்தனை குடும்பங்கள் சிதறிசின்னாப்பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது? இனம்புரியாத எதிர்களால் ஏன் தோற்றோம், எப்படி தோற்கிறோம் என்பதையேனும் எத்தனை குடும்பங்கள் புரிந்துகொள்கின்றன?




விவசாயம் சார்ந்த சமூகத்திலிருந்து தமிழ் சமுதாயம் எந்திர தொழில்சார்ந்த நவீன சமூகத்திற்கும், எந்திரதொழிலிற்கு அடுத்த கட்டமான இன்றைய அமெரிக்கா-ஐரோப்பா-ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பின்-நவீன சமூகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கிறோம். நமது சமூகம் ஆதர்சமென்று நினைத்து கண்மூடித்தனமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இலக்கான பின்-நவீனத்துவ சமூகத்தின் இன்றைய நிலையென்ன? அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் தனிமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (Ref: Bowling Alone ). கூட்டுக்குடும்பம் தேய்ந்து நியூக்கிளியர் குடும்பம் ஆகி, பிறகு நியூக்கிளியர் குடும்பம் தேய்ந்து ஒரு-பெற்றோர் குடும்பம் (Divorced-Single Parent Family) மெஜாரிட்டியாகி ஆகிவிட்டது.

இன்று தமிழகத்திலும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டது. சிதையும் குடும்பங்களுக்கு காரணமான வில்லன்கள் : ஊடக-சமூக-பொருளாதார சக்திகளின் தாக்கங்கள்/பாதிப்புக்கள். ஊடக-சமூக-பொருளாதார சக்திகள் நம் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கும் புரியவைக்கும் கருவி எது?



குடும்பம் என்பது கணவன்-மனைவி மட்டும் அல்ல. தமிழகத்தில் பல தலைமுறை மனிதர்கள் (தாத்தா,அப்பா-அம்மா,குழந்தைகள்) இன்னும் ஒரே குடும்பமாக நகரத்தில் சின்னச்சின்ன பிளாட்களில் வாழ்க்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒவ்வொரு பிரட்சனை. அம்மாவாசை தோறும் குலதெய்வ கோயில்களுக்கு செல்பவர் ஒரு புறம். ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முழுதையும் கழித்தவர்கள் ஒரு புறம். வருடாவருடம் வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ளும் நிலையற்ற இளைய தலைமுறையினர் ஒரு புறம். காதல், கல்யாணம் போன்ற முக்கியமான விஷயங்கள் இவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை (கெளரவகொலைகள்-ஒருவனுக்குஒருத்தி-லிவிங்டூகெதர்) வெளிச்சம் போட்டுகாட்டிவிடுகிறது. இந்த தலைமுறைகள் ஒருவரை எப்படி புரிந்துகொண்டு இணக்கமாக வாழமுடியும்?



தமிழகத்தில் வந்த முதல் சமூகபுரட்சி:
                                                          
விவசாய சார்ந்த சமூகத்திலிருந்து நவீனத்துவ சமுதாயமாக மிகப்பெரிய கலகமில்லாமல் எநத சமூகமும் மாறவில்லை என்பது வரலாற்றின் உண்மை. இந்த சமூக தாவலுக்கு தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டாமா? இந்த தயார்படுத்தலை முதலில் செய்தது  திராவிடர் இயக்கங்கள்.

தொழில்புரட்சி ஏற்பட்டதற்குபின், திராவிடர் இயக்கங்கள், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது. அன்றைய சமுதாயத்தில் தமிழர்களின் அவலத்திற்கு காரணம் மதமும், மதம்-சார்ந்த தத்துவங்களுமே என்பதை உணர்ந்து மதம்-சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சமூகநீதி குரல் கொடுத்தனர். திராவிட இயக்கங்களின் ஒரு கிளை சமூகநீதி கோரிக்கையை அரசியல் மூலம் வெற்றிகரமாக கொண்டுவந்தபின் இந்த இயக்கங்களின் ஆதாரநோக்கம் நிறைவேறிவிட்டது. பிறகு இந்த இயக்கங்களின் மற்ற கொள்கைகள் பிசுபிசுத்து வலுவிலந்துவிட்டது.

இன்றைய நிலை

நேருவின் தயவாலும் திராவிட இயக்கங்களின் தயவாலும் இன்று நிறைய மக்கள் மிடில்கிளாஸ் ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம். இன்று தமிழ்நாட்டில் கிராமத்தில் இருப்பவர்களைவிட நகரத்தில் இருப்பவர்களே அதிகம். கிட்டத்தட்ட எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறோம். இண்ட்டர்நெட் 30-40 சதவிகித வீடுகளில் உள்ளது. ஆனால் இவையெல்லாம ஹார்ட்வேர் (Hardware).மேலைநாடுகளின்  டெக்னாலஜியை நுகர்பொருட்களாக இறக்குமதி செய்துகொண்ட நாம் டெக்னாலஜியில் புலிகளாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதில் வரும் சாப்ட்வேர் கலாச்சார பொருட்கள் - நம் மக்கள் தயாரிப்பது. இதன் தரம்?

நாம் டெக்னாலஜியில் புலிகள் என்பது எத்தனை பெரிய பொய்-மாயை என்பதை நமது எம்.என்.சி. சாப்ட்வேர் இன்ஜினியர்களை கேட்டாலே விளக்கமாக சொல்வார்கள் கடந்த ப்த்து-இருபது ஆண்டுகளில் நமது கல்வித்துறையில் வந்துள்ள இன்னொரு மிகப்பெரிய மாற்றம் கலை-சமூகம் சார்ந்த படிப்புக்கள், அடிப்படை சயின்ஸ் சார்ந்த படிப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டோம். இதனால் இன்றைய டெக்னாலஜி சார்ந்த உலக கட்டமைப்பில் நமது சமூகம் அந்நியபபட்டு மிகவும் அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா?

போன தலைமுறையின் சமூகநீதி அரசியலால் இன்று சாதிசேற்றில் சிக்கிவிட்டனர். நேருவின் சோஸியலிஸ்ட் பொருளாதாரம் சார்ந்த சமூகத்திற்கு இடஒதுக்கிடு அரசியல் ஓகே. ஆனால் இன்றைய கேபிடலிஸ்ட் சமூகத்திற்கு சாதி அரசியல் காலாவதியாகிவிட்டது அல்லவா? ஆனால் இன்று இருக்கும் திராவிட இயக்கங்கள் சாதி ஓட்டுவங்கியை கையில் வைத்துக்கொண்டு சமூகத்தை சீரலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த சமூகப்புரட்சி:

உலகமயத்தின் தாக்கத்தால் தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மிகப்பெரிய சமூகமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்தில், திராவிடர் இயக்கங்கள் பாதியில் விட்டுச் சென்றுவிட்ட சமூகப்புரட்சி மீண்டும் வரவேண்டும். அதற்கு முதலில் நமது சமூகம் அடையவேண்டிய அடுத்த கட்ட நிலை என்ன என்பதை வரையறுக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள் வெறுத்து ஒதுக்கிய பிராமின சமூகமே  நமக்கு நமது அடுத்தகட்ட முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என்பது Irony ஆனாலும் அதுவே நிஜம். பொருளாதாரத்தில் ஓரளவாவது முன்னேறிவிட்ட நாம், இதற்கு அடுத்த கட்டமான இலக்கியம், விளையாட்டு, சமூகம், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தில் முன்னேறவில்லை. ஒரு சமூகமாக தமிழருக்கு அடுத்த கட்டம் என்ன? நோபல், ஒலிம்பிக், ஆஸ்கார்/கான்ஸ் (Cannes) விருதுகள், E&Y தொழில்முனைவோர் விருதுகள் என்றிருக்க வேண்டாமா?





மக்கள் தொகையிலும் நிலபரப்பிலும் தமிழகத்திற்கு நிகரான பிரான்ஸ்-ஜெர்மனியின் சாதனைகளோடு நம்மை ஒப்பிட முடியுமா? நம்மிடம் மாறுதலுக்கான முயற்சிகள் கூட இருப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் இந்த மாறுதலை கொண்டுவர முனையப்போவதில்லை. ஏனென்றால் இந்த மாறுதல் அவர்களின் இப்போதைய சாதி-வாரிசு அரசிய்லையே மாற்றி முழுமையான மக்களாட்சி மலர வழி வகுக்கும்.

மீடியா புரட்சி:






மேலைநாடுகளில் தொழிற்புரட்சியின் (Industrial Revolution) போது டெக்னாலஜி மட்டும் மாறவில்லை. சைக்காலஜி, சமூகவியல், அழகியல் என்று மனித சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களை சென்றடையவற்கு நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும், அவை சார்ந்த மீடியாக்களுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. நாவல்களின் கதாபாத்திரங்களும்  திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் சிக்கலான சைக்காலஜி தத்துவங்கள் (ப்ராயிட், ஜங், ழகான்) அன்றாட வாழ்வில் எப்படி தாக்கம் ஏற்படுகிறது என்பதை சாமானியர்களுக்கும் புரியவைத்தன. இந்த நிதர்சனங்கள் கடவுளற்ற விஞ்ஞானம் சார்ந்த சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தது.

ஜப்பானில் இந்த சமூகமாற்றம் நிகழ்ந்தபோது இந்த மாற்றங்களை மையமாக வைத்து ஓசு (OZU) போன்ற இயக்குனர்கள் எடுத்த படங்களே




புராண-ஆன்மீக கருத்துகளைவிட இன்று மேலைய சைக்காலஜிட்களின் கருத்துக்களே இன்றைய் சமூகசூழலுக்கு (தமிழகத்திலும்) ஏற்றவாறு உள்ளன. சாமனிய மனிதருக்கும் புரியும் படி இந்த கருத்துக்களை மையமாக வைத்து தமிழில் இன்று எஸ்.ராவின் துயில் நாவல் போன்ற இலக்கியப்படைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற நாவல்கள் படிப்பவர்கள் வாழ்க்கையை புதியகோணங்களில் பார்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளில் புதிய தீர்வுகளை ஆலோசிக்கத் துவங்குவார்கள்.



ஆனால் இலக்கியம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத ந்மது சமூகத்தில் அனைத்து தர மக்களையும் சென்றடைய சினிமாவும் டீவியுமே சரியான மீடியாக்கள். ஆனால் இன்றைய சினிமாவும் டீவியும் வெறும் கனவுலக பேண்ட்சிகளிலேயே திளைத்திருக்கிறது.





ஸ்டார்-வார்ஸ், ஈ.டீ., பேக் டூ த ப்யூச்சர் போன்ற படங்களை பார்த்த போன தலைமுறை இளைஞர்கள் பலர் விஞ்ஞானி ஆவது ஒரு கவர்ச்சிகரமான கரீயராக (career) நினைத்து, அதற்காக உழைத்து, விஞ்ஞானி ஆனார்கள். இன்று தமிழகத்தில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் சமுதாயம் வைக்கும் ரோல்மாடல்கள் யார்? தமிழில் ரோல்மாடல்கள் இல்லாததால் அந்நியர்களையே ரோல்மாடல்களாக கொண்டால், குழந்தைகள் அவர்களது ரோல்மாடல்கள் இருக்கும் நாடுகளுக்குத்தானே புலம்பெயர்ந்து செல்வார்கள்? ஈழத்தைவிட்டு தமிழர்கள் புலம்பெயர்ந்ததை பற்றி புலம்பும் நாம், வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தைவிட்டும் தமிழர்கள் புலம்பெயர்ந்து போய்விடுவார்கள் (போய்கொண்டிருக்கிறார்கள்) என்பதை ஏன் மறந்திருக்கிறாரார்கள்?

ரசனை மாற்றம் ஒரு சின்ன ஆரம்பம்




சைன்ஸ் பிக்‌ஷன் படமாக வந்த நமது எந்திரன் படம் ஸ்டார்வார்ஸ் படத்தை போல யாரையேனும் இன்ஸ்பயெர் (Inspire) பண்ணுமா? கதைக்கு தேவையே இல்லாத பாடல் காட்சிகள் பார்ப்பவர்களை மட்டும் அல்ல இயக்குனரின் கவனத்தை கூட திசைதிருப்பி விட்டதே.. காமெடி எனற பெயரில் ஹீரோவுடன் இருக்கும் அசிஸ்டெண்ட் சயிண்டிஸ்ட்கள் (அவர்களும் சயிண்டிஸ்டுகள் தானே? இல்லை ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் கெளவரமான சயிண்டிஸ்டாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதா என்ன?)
கேலிக்குரியவர்களாக சித்தரிப்பது மாதிரி ஆங்கில படங்களில் வருகிறதா?

இந்த தவறுகளுக்கு சங்கர் காரணம் அல்ல. த்மிழ் ரசிகர்களே காரணம். காமெடி ட்ரேக், பாடல்-டான்ஸ் ட்ரேக் என்று கதைக்கு வேண்டாதவற்றை எதிர்பார்ப்பதால் வரும் விபரீதம். ஹிந்தியில் இன்று கதைசார்ந்த யதார்த்த சினிமாக்கள் வழக்கமான மசாலாக்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. ஆனால் தமிழில்? இந்த காமெடி-பாடல் பிட் இல்லாவிட்டால் ஒரு படம் கமெர்சியல் படம் அல்ல என்று நினைக்கும் ரசிகர் மனோபாவம் மாறினாலே நல்ல கதையுள்ள படங்கள் வருவதற்கு வழி வகுக்கும்.

சோசியல் மீடியாவின் சக்தி



மீடியாவின் சக்தியை நன்கு உணர்ந்தவர்கள் திமுகாவினர். திமுகவினர் (அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்) சினிமா சார்ந்தவர்கள். அரசியலில் வென்றால் தான் மீடியாவில் ஜெயிக்கமுடியும் என்பதை உணர்ந்து, சினிமா-அரசியல் காம்பினேஷனை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். அரசியலில் வென்ற பின்னர், மீடியாவை கையில் வைத்து கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள்   அரசிய்ல் சாராத பேண்ட்டசி சினிமாவையே மக்கள் பர்ர்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் அடுத்த நிலை கனவுகள்/கதைகள் என்பது இப்போது அவர்களுக்கு அலர்ஜியே. இவர்களை மீறி எப்படி மீடியா புரட்சி? வரும். முதலில் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளுங்கள். மீடியா புரட்சி தானாக நடந்துவிடும்.



டுனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் கூட இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் அரசியல் புரட்சியே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் திரைப்பட ரசனையை கூட மாற்ற முடியாதா என்ன?


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...