Monday, March 14, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 2


முன்னுரை: 

திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைக்கின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.



எங்கிருந்தோ வந்தாள்:


காதலின் ஒரு முக்கிய அம்சம் காதலின் நினைவுகள். நினைவுகள் இருக்கும் வரை தான் காதலும். ஆனால் அந்த நினைவுகள் வலுவிழந்தால் காதலும் வலுவிழந்து விடும் என்ற கருத்தை ஆதாரமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன.

இந்த வரிசையில் சிவாஜி-ஜெயலலிதா நடித்து மிகப் பெரிய ஹிட்டன ரொமன்ஸ் படம் எங்கிருந்தோ வந்தாள். படத்தின் மூலக்கதை ஒரு வங்க மொழி நாவலே. பைத்தியமாக இருக்கும் நாயகன், அவன் பைத்தியமாக இருந்த காலத்தில் அவனை அரவணைத்த நாயகியை. பைத்தியம் தெளிந்தவுடன் மறந்துவிடுகிறான். ஆனால் பல சோதனைக்கு பிறகு இணைகிறார்கள்.

இந்த மூலக்கதையின் நாயகன் பாத்திரத்தை நாயகியாகவும், நாயகியின் பாத்திரத்தை நாயகனாகவும் மாற்றி கதையமைத்து வெளிவந்த கமல்-ஸ்ரீதேவி படம் பாலும்கேந்திராவின் மூன்றாம் பிறை. கதையில் கமலின் பாத்திரத்தின் காதலோடு சில்க் ஸ்மிதா  பாத்திரத்தின் காமத்தை ஒரு அழகான காண்ட்ராஸ்ட் அமைத்தது மூன்றாம் பிறையின் சிறப்பு அம்சம் எனலாம். (இந்த ட்ராக்த்தான் படத்தை ஓடவைத்தது என்ற வாதம் ஓன்றும் உள்ளது).



நினைவுகள் மறதி நோயான அம்னிஷியாவை காதல் மறதிக்கான காரணமாக வைத்து உருவாக்கப்பட்ட ரோமன்ஸ் படங்கள் தமிழில் ஏகத்திற்கு இருக்கின்றன. கணவனை மறந்து இன்னொருவரை
மணப்பதால் உருவாகும் முக்கோண காதல் கதைகள் ஒரு தனி ஜான்ரே அளவிற்கு அரைத்த மாவையே அரைத்து ஏகத்திற்கு படங்கள் வந்துள்ளன். உதாரணம் சிவக்குமார்-ஜெய்ஸ்ரீ நடித்த யாரோ எழுதிய கவிதை. 







இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ்

காதல் மறதியை மையமாக, ஆனால் இந்த காலத்திற்கு ஏற்றவாறு ஒரு வித்தியாசமான அம்னிசியாவுடன் கலந்து எடுத்த படம் ஜெயம் ரவியின் தீபாவளி (50 First Dates ஆங்கில படத்தின் சாயலும் இருக்கிறது).



எங்கிருந்தோ வந்தாளின் ஆதாரம் :

ஆனால் எங்கிருந்தோ வந்தாள் கதையின் அம்சங்களும் கூட வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அதுவும் காளிதாஸின் சகுந்தலை தான். சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.




சகுந்தலையின் கதை காலத்திற்கு ஏற்ப எப்படியெல்லாம் மாறி. மருவி வருகிறது என்பது ஒரு வியப்பின் சரித்திரக் குறியீடு தானே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...