Tuesday, March 1, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 1

முன்னுரை:




திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைகின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.


தேவதாஸ் :



என்னை பொருத்தவரை ஒரு படம்/கதை எப்போது மாஸ்ட்டர்பீஸாகிறது என்றால் அந்த படத்தின் கதையை தழுவி பல கதைகள் (பல ஆண்டுகள் கழித்தும்) வரும்போதுதான். அந்த வகையில் தேவதாஸ் கதை தமிழில் மட்டுமல்ல இந்திய ரோமான்ஸ் படங்களிலும் ஒரு மைல்கல்-மாஸ்ட்டர்பீஸ். காதல் தோல்வியின் முதல் அடையாளம் தாடி என்றால, இரண்டாவது அடையாளம் தேவதாஸ். அந்த அளவு தேவதாஸ் பிரபலம். இந்த தேவதாஸின் பாதிப்பில் பல ரொமான்ஸ் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில சிலவற்றை பார்ப்போம்.



சமீபத்தில் கூட தேவதாஸ் கதை பல முறை ரீமேக் ஆகியிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸும் அனுராக் காஸியாப்பின் தேவ்-டி யும் இதில் முக்கியமானவை. ஆனால் இவை இரண்டும் நேரடி ரீமெக்குகள். நேரடி ரீமேக்கில்லாமல் தேவதாஸின் சாரத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் மாற்றி, வேறு முலாம் பூசப்பட்ட தழுவல் படக் கதைகளை பாப்போம்.



அதற்கு அந்த படத்தின் முக்கிய சாராம்சத்தை பார்க்கவேண்டும். தேவதாஸ் படத்தின் முக்கிய சாராம்சங்கள் – பால்யபருவ காதல் ஜோடி, ஏழை-பணக்காரன் ஏற்ற தாழ்வு காதலில் ஏற்படுத்தும் பிரச்சனை, காதலினால் பெரிய இடத்தில் கல்யாணம் பேசச்சென்று- அதனால் ஏற்படும் (பெற்றோர்க்கு) அவமானம், காதல் நிராகரிப்பு –பின் நிராகரித்த அதே பழைய காதலியை நினைத்து வாடுவது, (காதல் தோல்வியால் தன்னையே அழித்துக்கொள்வது ஆகியன.





வசந்த மாளிகையில் பால்யபருவ காதல் அம்சத்தை தவிர்த்து மற்ற அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. இதில் அவமானம் பெற்றோருக்கு அல்ல - காதலிக்கே நேரடியாக ஏற்படுகிறது. வசந்த மாளிகை படத்துடன் கான்சரை சேர்த்தால் – வாழ்வே மாயம். வாழ்வே மாயத்தில் ஹீரோவை பாடகனாக்கினால் – பயணங்கள் முடிவதில்லை. கல்யாணத்திற்கு பேசச்செனற் தாய்க்கு அவமானம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் வேறு மசாலா கலந்தால் – கிழக்கு வாசல்.







தேவதாஸின் ஆதாரம் :

ஆனால் தேவதாஸ் கதையின் அம்சங்களே வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அது காளிதாஸின் சகுந்தலை. சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.



சகுந்தலையின் சாரம் தேவதாஸில் கொஞ்சம் மருவி வெளிப்படுவது தெரிகிறதா? தேவதாஸை போல் இல்லாமல் சகுந்தலையின் சமீப கால டிட்டோ பதிவு சுபாஸ் கெய்யின் தாள் ( Taal ).

இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ் :

ஹிந்தியில் தேவதாஸின் சாரம் தொடர்ந்து பல படங்களில் வருகிறது. உதாரணமாக Bachna Ae Haseeno படத்தில் ஹீரோ ஒரு பெண்ணை காதலித்து மறந்துவிட்டு, பிறகு வேறு பெண்ணை காதலிக்கிறான், பிறகு அந்த பெண்ணையும் மறந்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் ஹீரோவை நிராகரிக்கும்போது காதல் நிராகரிப்பின் வலியை உணர்ந்து, தான் மற்ற பெண்களுக்கு இழைத்த கஷ்டத்தை உணர்ந்து, ஹீரோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க திரும்பிச் செல்கிறான்.



Bachna Ae Haseeno – என்னை பொருத்தவரை மாறிக்கொண்டே இருக்கும் இன்றையை கால காதலை பிரதிபலிக்கும் ஒரு புத்திசாலித்தனமான தேவதாஸ் கதை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...